வெள்ளி, 31 டிசம்பர், 2010

புத்தாண்டு சபதம்

புத்தாண்டு என்றாலே ஒவ்வருவருக்கும் ஒவ்வொரு சபதம் எடுப்பதும் சில நாட்களில் மறந்து விடுவதும் இயல்பு, நானும் இதற்க்கு விதிவிலக்கல்ல. எப்போதுமே சபதம் எடுத்து மனதில் வைத்து மறந்து விடுவேன். சபதம் 20 சதவீதம் வெற்றி பெரும். ஆனால் இம்முறை இடுகை எழுதினால் சிறிது மனதில் தங்கும் மேலும் ஒரு எழுத்து பூர்வமான ஆதாரம் இருந்தால் வெற்றி பெரும் சதவீதம் பற்றியும் ஆராயலாம்.

சரி, போன வருட சபதம் என்ன என்றால் எந்த ஒரு அரசியல் வாதி பற்றியும், அவர்கள் ஊழல் பற்றியும் உறவுகளிடமும், நண்பர்களிடமும், அலுவலக நண்பர்களிடமும் பேசி நேரத்தை வீணாக்க கூடாது என்பது. ஒரு நான்கு மாதம் கழித்து உலக தமிழ் மாநாடு மூலம் நடந்த அரசியல் வியாபாரங்கள் பற்றி நண்பர்களிடமும், அலுவலக நண்பர்களிடமும் பலமணி நேரம் வீனடிதாயிற்று. மேலும் 2G (CAG) அலைகற்றை தணிக்கை அறிக்கை, ராடியா தொலைபேசி பதிவுகள் வெளியானதும் தெருவில் எவரைகண்டாலும் இந்த பேச்சு. இப்படி பேசி பேசி எதுவும் நடக்காது. என்னால் நேரத்தை வீணடிக்க தான் முடிந்தது.

இந்த வருட சபதம் என்ன என்றால் எந்த ஒரு அரசியல் வாதி பற்றியும், அவர்கள் ஊழல் பற்றியும் உறவுகளிடமும், நண்பர்களிடமும், அலுவலக நண்பர்களிடமும் பேசி நேரத்தை வீணாக்க கூடாது என்று எழுத்து பூர்வமாகவே எழுதுகிறேன். மேலும் சில சபதங்கள் " யாவருக்கும் பயன் படாத என்னை போன்ற இடுகைகளில் இனி நேரத்தை வீணடிக்க கூடாது. மாதம் ஒரு இடுகை பதிவு செய்யணும், அந்த இடுகை எதாவது ஒரு நல்ல விஷத்தை சொல்லணும். இணையத்திடம் அடிமையாகாமல் இருக்க சில பல வழிமுறைகளை கையாண்டு அடிமையாகாமல் தப்பிக்கணும்." நான் சிகரெட் குடிப்பதை இது போல் பல வருடங்களுக்கு முன் ஒரு சபதம் செய்து 90 சதவீதம் வெற்றி பெற்றேன். 10 சதவீதம் தோல்வி, அதாவது ஒவ்வொரு வருடமும் அப்பப்ப 20 சிகரெட்டுகள் புகைத்து விடுகிறேன்.

வியாழன், 30 டிசம்பர், 2010

எங்க ஊர்

அமெரிக்கா காரனும், ஐரோப்பா காரனும் எதை எதையோ (?) எப்பாடுபட்டோ கண்டுபிடிச்சாலும், அதை அதை எப்படி எப்படி பயன்படுத்தி பணம் சம்பாதிக்கிறது எங்க ஊர் பயலுகதான். கை பேசி கண்டு பிடிச்சவன் மார்டின் கூப்பர். இவன் எவளவு கஷ்டப்பட்டு கண்டுபிடிச்சானோ(?). ஆனா எங்க ஊர் பயலுக மேனா மேனுக்கியா இருந்துகிட்டு இவன் கண்டு பிடிச்ச கை பேசி வைச்சிகிட்டு,அலைகற்றை வைச்சிகிட்டு இவன் சம்பாதிச்ச விட அதிகமா சம்பாதிசிடாணுக. என்ன செய்ய, பாதி நாளு அமெரிக்காகாரனும், ஐரோப்பாகாரனும் கேடு கேட்டவனுக, அவிங்களுக்கு கலாசாரம் கிடையாது, பல பேரோட சேந்து வாழுவானுக, பல விதமா வாழுவானுகன்னு சொல்லிகிட்டே, எங்க ஊரு காரனுக எங்க ஓட்ட கிடைச்சாலும் புகுந்து விளையாடிடுவானுக. சரி இது இருக்கட்டும்.

எங்க ஊர்ல பெண்கள தெய்வமாதான் மதிப்போம். குறிப்பா ராடிய அம்மா, பர்கா அம்மா, கனி அம்மா, சோனி அம்மா, அப்புறம் தமிழ்நாட்டு அம்மா இவங்கலாம் இந்த நுற்றாண்டு பெண் தெய்வங்கள்.எப்படியும் இந்த நூற்றாண்டுல என் ஊர் இந்தியாவுல இந்த பெண் தெய்வங்களாலே பெரிய மாற்றம் வரும்.

வெள்ளி, 12 மார்ச், 2010

விலைவாசி - 2010

தற்போதுள்ள அரசியல் தலைவர்களில் மன்மோகன் சிங் என்னை கவர்ந்து இருந்தார். காரணம் பொருளியலில் முனைவர் பட்டம் பெற்றவர் மற்றும் பல உயர் பதவிகளை வகித்தவர். இவர் பிரதமராகி நாட்டின் பொருளாதரத்தை முன்னேற்றுவார் என்று நானும் நம்பினேன். என் நம்பிக்கை வீண் போகவில்லை. அதேபோல் நாட்டில் உள்ள அனைவரயும் லட்சத்திபத்தி ஆக்கிவிட்டுத்தான் இறங்குவார் போல!. ஏனெனில் நாட்டில் உள்ள நிலைமை அப்படி.ஜிம்பாபே மக்கள் அனைவரும் 'Billionaire' தான் ஆனால் என்ன பிரயோஜனம், 'Forbs Billionaire list' ல் இடம் பெறவில்லையே ?

இளங்கலை பொருளாதாரம் முதல் வருடம் படிக்கும் மாணவன் சொல்லுவான், "நாட்டில் வேலை வாய்ப்பு அதிகரித்தால் விலை வாசி அதிகரிக்கும்" என்று. பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் செலவுகளை குறைக்க தகவல் தொழில் நுட்பம் சார்ந்த சேவைகளை இந்தியாவில் இருந்து பெற்றுக்கொள்கிறது, அதனால் 1999 - இல் இருந்து இன்றுவரை இந்தியாவில் பத்து லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது. இந்த பத்து லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றதால் விலைவாசி இவ்வாறு அதிகரித்தது. இந்த விலைவாசி அதிகரிப்பை குறைக்க மன் மோகன் அரசு எந்த நடவடிக்கை எடுத்தது என்பது அந்த ஆண்டவனுக்கு தான் தெரியும்.

வரும் வருடங்களில் இன்னும் பல லட்சம் பேருக்கு தொழில் நுட்பம்,வங்கி, காப்பீடு, இயந்திரவியல்,அறிவியல் துறைகளில் இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் மூலம் வேலை கிடைக்கும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. வேலை வாய்ப்பு அதிகரித்தால் மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும், அதிகமாக உணவு பொருட்கள் விற்பனையாகும். எனவே விலைவாசி இன்னும் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மேலும் கச்சா எண்ணெய் விலையும் வடக்கு முகமாக செல்கிறது.
எனவே தங்கள் அரசு விலைவாசி ஏற்றத்தால் கவிழாமல் இருக்க, இனிமேலாவது சிவனே! என்று "ரப்பர் ஸ்டாம்ப்" ஆகா இல்லாமல் விலைவாசியை கட்டு படுத்த ஏதாவது நடவடிக்கை எடுங்கள்.
இன்னொரு விஷயம் "பன்னாட்டு நிறுவங்களே எங்க நாட்டுக்கு முதலீடு செய்ய வாங்கோ! வாங்கோ!" என்று கூவ வேண்டாம். ஏனெனில் அவர்கள் வியாபாரம் செய்ய வருவது இந்தியாவில் இருந்து லாபத்தை அள்ளத்தான். நஷ்ட படுவதற்காக அல்ல. இனிமேல் பொருளாதரத்தில் உள்ள இலகுவான சூத்திரங்களை மூலம் நாட்டை வழிநடத்தாமல், அதில் உள்ள சிக்கலான விசயங்களை இந்திய பொருளாதாரத்தில் பயன் படுத்த முயற்சி செய்தால் குப்பனும், சுப்பனும் பயனுருவான். இல்லாவிட்டால் டாட்டாக்களும், அம்பானிகளும் தான் பயனடைவார்கள். நாட்டில் உள்ள வளங்களை வைத்து விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் திட்டம் தீட்டுங்கள் தல.

சென்ற 2004 முதல் 2009 ஆட்சி காலத்தில் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்தீர்கள். இதனால் ஏழை விவசாயிகளுக்கு பெறாமல், விவசாயம் மற்றும் அரசியல் வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு லட்சகணக்கில் லாபம் கிடைத்தது. இம்முறையாவது விலைவாசி உயர்வால் வாடும் ஏழைகளுக்கு பயனளிக்கும் வகையில் திட்டம் தீட்டுங்கள்.
உங்கள் சர்தாஜி மூளையை ஒதுக்கிவிட்டு, பொருளாதார முனைவர் மூளையை பயன்படுத்தினால் வறுமையில் வாடும் இந்திய ஏழைகளுக்கு நலம் ஏற்படும்.

வெள்ளி, 29 ஜனவரி, 2010

என் நிலைப்பாடு

இந்த நாட்டிலே எனக்கு கிடைத்த ஒரே சக்தி வாக்கு. அதை இவளவு நாள் எவ்வாறு வீணடித்தேன் ? சூப்பர் நடிகர் 1996 தேர்தலில் தோன்றி "அம்மாவுக்கு வாக்கு அளித்தால் கடவுளாலும் நம்மை காப்பாற்ற முடியாது" என்று கூறினார்.அவர் சொல்லுக்காக அய்யாவுக்கு வாக்கு அளித்தேன். 2001 தேர்தலில் அதே சூப்பர் நடிகர் "நான் இந்த கட்சிக்கு தான் ஓட்டு போடுவேன்" என்றார். சரி, அவர் கூறிய கட்சி மற்றும் அதன் கூட்டணிக்கு வாக்கு அளித்தேன். பிறகு 2006 தேர்தலில் முருங்கைக்காய் ஸ்பெஷல் நடிகர் தோன்றி "இந்த கட்சிக்கு ஓட்டு போடுங்கள் என்று கூறினார்". ஆகையால் மீண்டும் அய்யாவுக்கே வாக்கு அளித்தேன். சரி இவளவு நாள் சுயபுத்தி இல்லாமல் ஒரு "சினிமாக்காரன்" பேச்சை கேட்டு அய்யா, அம்மாவுக்கு மாறி மாறி வாக்கு அளித்ததால் அவர்களின் சொந்தம்,உறவினர்கள் Bill Gates உடன் போட்டியிட்டு உலகமகா பணக்காரர்கள் வரிசையில் இடம் பெற்று விட்டனர்.

இனி 2011 ல் தேர்தல். அதில் நிச்சயமாக வசனகர்த்தா, நடிகை, நடிகர்கள் ஆகியோருக்கு, அவர்களுடன் கூட்டணி உள்ளவர்களுக்கு என் வாக்கு இல்லை. ஆக சினிமாகாரனுக்கு,சினிமாக்காரர்கள் ஆதரிக்கும் கட்சி மற்றும் வேட்ப்பாளருக்கு இனிமேல் வாக்கு அளிப்பதில்லை. அப்படியானால் மக்கள் தொலைக்காட்சி நிறுவனருக்கா வாக்கு ? அவர் சாதியை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறார். சினிமாகாரனை விட மோசம். அப்புறம் யாருக்குத்தான் வாக்கு ? தேர்தலில் இவர்கள் கட்சி,கூட்டணி கட்சி அல்லாமல் உள்ளவர்களை ஆராய்ந்து, அவர்களில் யார் நாட்டின் மேல் சிறிதளவாவது அக்கறை காட்டுவார்கள் என பலமுறை யோசித்து ஒரு நல்லவராக, நல்ல கட்சியாக தேர்வு செய்து வாக்கு அளிக்கலாம். சரி அவர் 'மதுகோடா' போல் வில்லங்கமான ஆளா இருந்தா ? இவரிடமும் பாடத்தை கற்றுக்கொண்டு அடுத்த தேர்தல்களில் பல உத்திகளை கையாண்டு,ஆராய்ந்து ஒரு நல்ல கட்சியை, வேட்பாளரை தேர்ந்தெடுக்கலாம். எல்லாம் நம்பிக்கை.

திங்கள், 18 ஜனவரி, 2010

இந்தியன் யார் ?

மனிதன் என்றைக்குமே விலங்கு என்ற இனத்தில் இருந்து மாறப்போவதில்லை. இந்திய ஒரு சிறந்த கலாச்சாரமுள்ள நாடு என்பது பட்டிமன்றம், அரட்டை அரங்கம் போன்ற மேடைகளில் பேச்சிலும், இலக்கியங்களில் அச்சுவாகவும் தான் உள்ளது. நடை முறையில் இல்லை. சத்தியமாக இந்திய கலாச்சாரம் இந்தியாவில் இல்லை. இந்திய மக்கள் தன் அண்டை நாட்டில் உள்ள ஈழ தமிழன் உடல் சிதறி இறப்பதை கண்டு ஒரு சொட்டு கண்ணீர் கூட வடிக்காமல் வேடிக்கை பார்த்தான். இப்போது எந்த அநியாயம் தன் கண்முன் நடந்தாலும் வேடிக்கைதான் பார்க்கிறான்.

மஞ்சு நாத் என்பவர் Indian Institute of Management ல் MBA படித்துவிட்டு தன் தாய் நாட்டிற்கு உழைக்கவேண்டும் என்பதற்காக தன் நண்பர்கள் போல் அல்லாமல், வெளிநாட்டு நிறுவன வாய்ப்புகளை உதறிவிட்டு Indian Oil corporation என்ற நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். நேர்மையான அதிகாரியாக இருந்து பெட்ரோல் கலப்படங்களை தடுத்து நிறுத்தும் நல்ல செயல்களை செய்தததால் வட இந்தியாவில் மனித விலங்குகளால் சுட்டு கொல்லப்பட்டார்.

தென் இந்தியாவில் வெற்றிவேல் என்ற தமிழ் நாடு காவல் துறை உதவி ஆய்வாளர் சில மனித விலங்குகளால் வெட்டப்பட்டார். வெட்டுப்பட்டு உயிருக்கு இருபது நிமிடம் நடு ரோட்டில் போரடிக் கொண்டிருகையில், அந்த வழியில் வந்த இரண்டு தமிழ் நாடு அரசு அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர் ஆகியோர் வேடிக்கை தான் பார்த்தனர். இது வீடியோ எடுக்கப்பட்டு தொலைகாட்சி, இன்டர்நெட் என அணைத்து ஊடகங்களிலும் பரவி உள்ளது. தமிழக மக்கள் இதை கண்டு என்ன செய்தார்கள்?. நான் என்ன செய்தேன் ? அனைவரும் ஒரு சிறு எதிர்ப்பு கூட தெரிவிக்கவில்லை. என்ன காரணம் என்று யோசித்தால் தெரிகிறது, இந்தியர்கள் மனித விலங்குகள் மட்டு மல்ல. இவைகள் நடமாடும் முட்டாள் விலங்குகள். இந்த முட்டாள் விலங்குகளுக்கு என்று ஒரு கலாச்சாரமாம் அதுவும் மற்ற நாட்டு மனித விலங்குளை விட உயர்ந்ததாம்.கேவலம் இதற்கு அமெரிக்க, ஐரோப்ப மற்றும் அணைத்து நாட்டு கலாச்சாரங்களும், அந்தந்த நாட்டு மனித விலங்குகளும் எவளவோ மேல்.

திங்கள், 23 நவம்பர், 2009

சினிமா பைத்தியம்

சினிமா பைத்தியம்...... நான் தான்(ஒரு காலத்தில்). நான் என்னுடைய சிறு வயதில் எங்கடா சினிமா போடுவார்கள் என்று திரிந்த காலங்கள் பற்றி நினைத்து இடும் இடுகை.
என்னுடைய எட்டாவது வயது முதல் ஏதாவது கல்யாண வீடு, கோயில் திருவிழா என்றால் உடனே அங்கு சினிமா பார்க்க சென்று விடுவேன். அந்த நேரங்களில் ஒருநாளில் இரண்டு அல்லது மூன்று சினிமாக்கள் போடுவார்கள். கல்யாண வீடு என்றால் 'டெக்' எடுத்து போடுவார்கள். கோயில் திருவிழா என்றால் திரை கட்டி போடுவார்கள். அப்படி ஒரே நாளில் அடுத்தடுத்து நான் பார்த்த இரண்டு படங்கள் இதோ:
நல்ல தம்பி, ஒரு கைதியின் டயரி.
சின்னவீடு, மிஸ்டர் பாரத்
வைஜயந்தி ஐ பி ஸ், இது தாண்ட போலீஸ்
மனிதன், வெற்றிவிழா
ஆயரத்தில் ஒருவன்,கரகாட்டகாரன்
சின்ன தம்பி பெரிய தம்பி, பூந்தோட்ட காவல்காரன்
மிஸ்டர் கார்த்திக், பூ பூ வா பூத்திருக்கு
இந்திரன் சந்திரன், பொன் மனச்செல்வன்
அபூர்வ சகோதரர்கள், மாப்பிளை
புதியபாதை, பொண்டாட்டி தேவை
.
.
. இன்னும் பல.
மேற்கூரிய சினிமாக்கள் யாவும் என் பள்ளி நாட்களில் ஒரே நாளில் அடுத்தடுத்து நான் பார்த்த இரண்டு படங்கள்.

இப்படி சினிமா பார்த்ததால் என் பொறியியல் வல்லுநர் ஆகும் கனவு கலைந்தது.
பிளஸ் டூ வில் பள்ளியிலே முதல் மதிப்பெண் எடுத்தும் என் இன்ஜினியரிங் சீட்டை கோட்டை விட்டேன்.

இதே போல் என் இளங்கலை கல்லூரி நாட்களில் ஒரே நாளில் அடுத்தடுத்து நான் பார்த்த இரண்டு படங்கள் அனைத்தும் திரை அரங்கு சென்று பார்த்தவை. அவைகளின் பட்டியல் இதோ:

மக்கள் ஆட்சி, குருதிப்புனல்
ரசிகன், சீவலபேரி பாண்டி
காதலன், பாட்சா
நாட்டாமை, பூவே உனக்காக
hum aapke hain kaun, hum aapke hain kaun
.
.
இன்னும் பல.

இப்படி சினிமா பார்த்ததால் என்னால் கஷ்டப்பட்டு அறுபத்து இரண்டு சதவீதம் மட்டுமே எடுக்க முடிந்தது.இரண்டு மணிநேர சினிமா பார்த்து ஐந்து மணிநேரம் பார்த்த படத்தை பற்றி கல்லூரி மாணவர் விடுதியில் பேசியுள்ளேன்.அதற்காக "வெட்டி பல்ஸ்" என்ற பட்டமும் எனக்கு என் கல்லூரி நண்பர்களால் கிடைத்தது.

ஆனால் என்னுடைய முதுகலை படிப்பின் போது என்னை வழி நடத்தி சென்றது விவேகானந்தரும்,ஓஷோவும் தான். விவேகானந்தரின் ராஜயோகம்,பக்தியோகம், கர்மயோகம் மற்றும் அவர் ஆற்றிய சொற்பொழிவுகளின் தொகுப்பு என்னை சிந்திக்க வைத்தது. அதனால் வாரம் ஒரு படம் பார்ப்பது என்று முடிவெடுத்து வாரத்துக்கு ஒரு சினிமா என்று பார்த்தேன்.என்னுடைய முதுகலையில் எழுபத்து நான்கு சதவீதம் எடுத்து தேற்சி பெற்றேன்.

விவேகானந்தர் கூறிய "வாழ்க்கை கொடுக்கும் அடிகள் தான் மனிதனின் முன்னேற்றத்தை தரும்" என்ற பொன் மொழிக்கு ஏற்ப சென்னை வந்து வேலை தேடும் போதும், வேலை கிடைத்த பின்னும், வடபழனியில் வாசித்த போதும், சினிமாகாரர்களை நேரில் பார்த்த போதும், சினிமாதுறை சம்பந்த பட்டவர்கள் வீட்டில் குடியிருந்த போதும், சினிமா சூட்டிங் பார்க்க நேரம் கிடைத்தாலும் சினிமா பற்றி, சினிமா பார்ப்பது பற்றி வாழ்க்கை கொடுத்த அடிகளால் எந்த சிந்தனையும் எழவில்லை. வாழ்க்கை கொடுத்த அடி சினிமா பற்றி சிந்திப்பதை நிறுத்தியது.

இன்று என் மனம் சொல்கிறது "சினிமா ஒரு தொழிற்சாலை அதில் நான் தற்போது கணினி பணி புரிவது போல் அங்கு பலர் வேலை செய்கிறார்கள். அதை திரை அரங்கு சென்று ஒருமுறை பார்த்தால் போதும். எல்லா தொழிலும் நடப்பது போல் இந்த தொழிலிலும் உழைக்கிறவர்களுக்கு சிறிய அளவில் கூலியும், மேனா மினிக்கிகளுக்கு அதிக கூலியும் கிடைக்கும். ஆனால் இந்த தொழிலில் ஜெயிச்ச முதலாளிகள் கொஞ்ச பேர்தான்"

எது எப்படியோ சினிமா பைத்தியங்களுக்கு வாழ்க்கை சரியான நேரத்தில் தன் அடியை கொடுக்கும்.

வெள்ளி, 23 அக்டோபர், 2009

மலிவு விலை மனிதநேயம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே தமிழகத்தின் மிக பெரிய அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனை அருகே 22-Oct-2009 அன்று நாற்பத்தி ஐந்து வயது மதிக்கதக்க ஒருவர் இறந்துள்ளார். அவர் காலில் அடிபட்டு இருபது நாட்களாக அந்த மருத்துவமனை அருகே இருந்து அவதிப்பட்டுள்ளார். மருத்துவமனை ஊழியர்களும், மருத்துவமனைக்கு செல்வோரும் கண்டும் காணாமல் இருந்துள்ளனர். அவர் இறந்தபின் மருத்துவமனை ஊழியர்கள் போஸ்ட்மார்டம் செய்ய உடலை எடுத்து சென்றுள்ளனர். அந்த உடலை வைத்து மருத்துவ மாணவர்களுக்கு பாடம் நடத்துவார்கள்.

18-Oct-2009 அன்று இரவு முப்பத்து ஐந்து வயது மதிக்கதக்க ஒரு பெண் குரோம்பேட்டில் இருந்து தாம்பரம் செல்ல ஆட்டோவில் சென்றுள்ளாள். அந்த ஆட்டோ டிரைவர் தாம்பரத்தில் நிற்காமல், ஒரு தவறான நோக்கத்துடன் வண்டலூர் வரை சென்றுள்ளான். அந்த பெண் தாம்பரத்தில் இருந்தே கத்தி, கதறி உள்ளாள்.வண்டலூரில் அந்த ஆட்டோ, வண்டலூர் உயிரியல் பூங்காவில் பயோலசிஸ்ட் ஆக வேலை பார்க்கும் ஒருவனாலும், அவனது உதவியாளனாலும் நிறுத்தப்பட்டுள்ளது. அந்த பெண் அவர்களிடம் ஆட்டோ டிரைவர் செய்த தவறை தெரிவித்துள்ளார். வண்டலூர் உயிரியல் பூங்காவில் வேலை பார்க்கும் அந்த இருவரும் தாங்கள் போலீஸ் என்று கூறி, அந்த பெண்ணை பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைக்கிறோம் என்று சொல்லி வண்டலூர் பூங்கா கேட் முன் உள்ள கார் நிறுத்தத்திற்கு கொண்டு சென்று மானபங்கம் செய்துள்ளனர். அந்த பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

உயிருடன் இருந்த மனிதன் இறக்க காத்து இருந்தனாரா ?
உயிருடன் இருந்த மனுசியை இறக்க வைக்க காத்து இருந்தனாரா ?
எதுவாய் இருந்தாலும் மனிதநேயம் இங்கு எப்பவுமே மலிவு விலைதான்.

மேற்கூறிய இரண்டு நிகழ்வுகளும் தமிழக தலைநகரம்(=தலைநரகம்) சென்னையில் நடந்துள்ளது.இதை செய்தித்தாளில் படித்தேன். இதுபோல் பல நிகழ்வுகள் நம்ம ஊரில் நடக்கும் என்று சகஜமாக எடுத்துக்கொள்ளாமல், நாம் கொஞ்சம் எச்சரிகையுடன் வாழ பழகி கொள்ள வேண்டும்.